சிகப்புப் புள்ளி

பஸ் ஸ்டாப்பிலிருந்து பஸ் கிளம்பும்போதுதான் சிவகுமரனுக்கு சட்டென்று நினைவு வந்தது. அது புக்கித் மேரா டவுன் சென்ட்டர். அங்கு இறங்க வேண்டும். ஆனால் சிகப்புப் பொத்தானை அழுத்துவதற்குள், பஸ் கிளம்பிவிட்டது. தன்னையே ஒருமுறை திட்டிக்கொண்டார். அடுத்த ஸ்டாப் சிறிதுதூரம். வெயிலில் திரும்பி நடந்துவர வேண்டும்.

“சர்ர்ரியான வேஸ்ட்டு மாமா நீ!” குணா சொன்னது மீண்டும் காதில் ஒலித்தது. அடுத்த ஸ்டாப்பில் பஸ்ஸிலிருந்து இறங்கி விறுவிறுவென மார்கெட்டை நோக்கி நடக்கையில், வெயிலுடன் சேர்ந்து எரிச்சலும் அவரைப் பற்றிக்கொண்டது. “நான் என்ன வேஸ்ட்டா?”

“ஹல்லோ பிரதர்! உங்கள இதுக்கு முன்னாடி யாராச்சும் இங்க இன்வைட் பண்ணிருக்காங்களா?”

நடந்து கொண்டிருந்தவரை வழிமறித்து ஆங்கிலத்தில் கேட்டாள் ஒரு சீனப்பெண். எதைப்பற்றிக் கேட்கிறாள் என்று புரிந்துகொள்ளச் சிறிது நேரமானது.  பக்கவாட்டில் இருந்த பெரிய வெள்ளைக்கோவிலைப் பார்த்தார். அதன் கூரை ஓடம் போல அமைந்திருந்தது. சிறிய நீல ஜன்னல்கள்.

“வீ ஆல் பிரதர் அண்ட் சிஸ்டர். நீங்க இந்தியாவிலிருந்து வந்தவரா?” என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.

“நோ. மலேஷியன்.”

“ஓ! அப்போ நீங்க கும்பிடற கடவுள்…” சற்று யோசித்து மெதுவாக உச்சரித்தாள். “மு..ரூ…கா?”

“எஸ். எஸ். முருகா” தலை ஆட்டினார்.

“எதாச்சும் நன்கொடை கேக்கப் போறாளா இவ?” மனதில் ஒரு எண்ணம் சட்டென ஓடியது.

“எங்க மாஸ்டர் மலேஷியாவும் போயிருக்கார். பாருங்க.” உடனே கையில் இருக்கும் புத்தகம் ஒன்றைத் திறந்தாள். அதில் ஒருபக்கத்தில் மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் வரைபடம் ஒட்டப்பட்டிருந்தது. சிங்கப்பூர் ஒரு சிறிய சிகப்புப் புள்ளியாக இருந்தது. வேறு சில நகரங்களை மட்டும் சுட்டிக்காட்டி இருந்தார்கள். அங்கெல்லாம் அவர்களுக்குக் கிளைகள் உள்ளதாகச் சொன்னாள்.  பல மலேசிய நகரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காண்பித்தாள்.

“எல்லாக் கடவுளும் ஒன்னு. முருகா, புத்தா, இயேசு… அதே மாதிரி எல்லோரும் நம்ம அக்கா தங்கச்சிங்கதான் பாருங்க.”

சிவகுமரன் மறுக்க முடியாமல் புகைப்படங்களை பார்த்துத் தலை அசைத்தார். பாதிரியார்போல வெள்ளை உடை அணிந்த ஒரு ஆசாமி பலபேருடன் பல இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள். அந்த வெள்ளை உடை அணிந்தவர்தான் மாஸ்டரோ? அவர் முகத்தில் ஒரு அமைதி கலந்த புன்னகை.

“நீங்க உள்ள வந்தீங்கன்னா உங்களுக்கு மாஸ்டர் ஆசிகள் தருவார்.”

வேறு வேலை இருக்கிறதென்று காரணம் சொல்வதற்குள், “ஜஸ்ட் டென் மினிட்ஸ் ஒன்லி பிரதர்” என்றாள். “வாழ்க்கையில ஒருமுறை ஆசி வாங்கினாபோதும். நீங்க சொர்க்கத்துக்குப் போகலாம்.”

உள்ளுக்குள் சிரிப்பு வந்தது சிவகுமரனுக்கு. சொர்க்கம் ஒன்னுதான் இப்போ குறை!

***

கையில் குளியலுக்கு தேவையான எல்லாப்பொருட்களும் இருந்தன. லிப்ட் பொத்தானை அழுத்தினார். பக்கத்தில் நின்றிருந்த மிஸ்.வாங்கிடம் “ஹெல்லோ!” என்றார்.  தன் வழுக்கைத் தலையை தடவியபடி குனிந்து, லிப்ட் கதவின் அடிவாரத்தை நோக்கினார். கூச்சம் சிறுவயதிலிருந்து அவருடன் பயணித்தது. அதுவும் தனது கையில் மாற்றுத் துணிகளுடன் நிற்கும்போது, பக்கத்தில் ஒரு பெண் வந்தால்…

தரையைப் பார்த்தபடியே லிப்ட்டில் நுழைந்து, முதல் நிலையை அடைந்தார். அங்கே சற்றுத்தள்ளி, தகரத்தாலான இரு குளியலறைகளும், இரு கழிவறைகளும் இருந்தன. ஒரு அறையின் வாசலில் பிளாஸ்டிக் பக்கெட்டுடன் ஒரு பெண் காத்திருந்தாள். மற்றொரு குளியலறையின் கதவை லேசாக தள்ளிப்பார்த்தார். உள்ளே யாரும் இல்லை. காத்திருந்த பெண்ணிடம் புன்னகைத்துவிட்டு உள்ளே சென்றார்.

புக்கித் மேரா புளோக் 107ல் ஐந்தாம் மாடியில் குடியிருந்தவர் சிவகுமரன். சொந்த வீடு. இன்னும் லோனை அடைக்கவில்லை. தற்போது வீட்டுக் கழிவறையை ஆட்களை வைத்து, எச்.டி.பி புதுப்பித்துக்கொண்டிருந்தது. இரண்டுவாரங்களாக இவ்வாறு குளியலுக்கும் மற்றவைக்கும் கீழே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தகர அறைகளுக்கு வரவேண்டும். வீட்டில் இருக்கும்போது, வேலை ஆட்கள் உண்டாக்கும் சப்தம் காதை அடைக்கும். ஆனால் அவர்களின் வேலை செய்யும் நேர்த்தியைக்கண்டு ஆச்சரியப்பட்டார். வாசலிலிருந்து சமையலறைக்குள் இருக்கும் கழிவறை வரை அட்டைக் கம்பளத்தால் ஒரு பாதை அமைத்து, தள்ளுந்து ஒன்றில் சாமான்களை கொண்டுவந்து இறக்கினார்கள். மார்பிள் தரையை பாதிக்காது. ஆனால் சிமெண்ட் நெடி வீடெங்கும் பரவிடும். பூஜை அறையை மட்டும் மூடி வைத்துவிட்டார்.

தகரக் குளியலறையின் கதவைமூடித் தாழிட முயன்றார். அப்போதுதான் ஏன் இந்த குளியலறைக்குள் அந்தப்பெண் போகாமல் நின்றிருந்தாள் என்று புரிந்தது. தாழிட முடியவில்லை. தாழ் சற்று குறைவான உயரத்தில் இருந்தது. வலதுபக்கம் இருக்கும் தகரக் கொக்கிக்குள் செல்லவில்லை. தாழை நெம்பிப் பார்த்தார். லேசான தகர கதவு என்பதால், நெம்பினால் தாழின் உயரத்தை அதிகரித்து விடலாமென தோன்றியது. ஐந்து நிமிடம் முக்கி முயன்றபின்னும், சற்றும் உயர மறுத்தது தாழ். கதவை காலால் மூடிப்பிடித்தப்படி, குளியல் பொருட்களை தகர மேடையில் வைத்தார்.

“சர்ர்ரியான வேஸ்ட்டு மாமா நீ!”

***

சிவகுமரனும் அவர் மனைவியும் தங்கியிருந்த அறையில் ஒரு கழிவறை.  சமையலறையைத் தாண்டி ஒரு கழிவறை. இவ்விரு கழிவறைகளும் ஒரு வழியாக புதுவுருவம் கொண்டபின்தான் பெருமூச்சு விட்டார்.

வீட்டில் தங்கியிருக்கும் வினோத்தை அழைத்து பொதுவான கழிவறையைக் காண்பித்தார், “பாருங்க வினோத். எல்லாம் புதுசு பண்ணியாச்சு. இந்த டோர் வந்து பாருங்க. இங்கிட்டு வாங்க.”

வினோத்தையும் கழிவறைக்குள் வரச்சொல்லி கதவை எப்படி மூடுவது என்று காண்பித்தார். பாதியாக மடியும் கதவை நேராக்கி,  கதவுப்பிடியை திருப்பினால் பூட்டிக்கொள்ளும். பலநாட்களாக இப்படியொரு கதவு வைக்கவேண்டும் என்று இவருக்கு ஆசை.

“நைஸ்” என்று மட்டும் சொன்னான் வினோத். கண்ணாடி அணிந்த ஐ.டி இளைஞன். மாதம் ஐநூற்றி ஐம்பது டாலருக்கு இவரின் வீட்டிலிருக்கும் ஒரு அறையை மட்டும் வாடகைக்கு எடுத்திருந்தான்.

“உங்களுக்குத் தெரிஞ்சு வேற யாராச்சும் அந்த ரூமுக்குப் பாத்தீங்களா?”

’அந்த ரூம்’ என்பது வீட்டில் காலியாக இருந்த மற்றொரு அறை. ’அந்த ரூம்’ பயங்கர குடைச்சலைக் கொடுத்தது. இதற்குமுன் அவருடைய நெருங்கிய நண்பனின் மகன் ஒருவன் அங்கு தங்கியிருந்தான். சுசேந்திரன். ’சுசேன்!’ என்று பாசத்துடன் அழைப்பார். பாயாசம், சிக்கன்கறி எல்லாம் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் அவன் கேர்ள்பிரண்டிற்கு அவரைப் பிடிக்கவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை. அவனும் சில மாதங்களுக்குப் பிறகு காலி செய்துவிட்டான். அவன் சென்று ஒரு வருடம் இருக்கும். இன்னும் அந்த அறைக்கு ஆள் கிடைத்தபாடில்லை.

அவர் வீட்டு ஏஜெண்டும் சரியான ப்ளர் சொதோங்! “இதோ கூட்டியாறேன். அதோ கூட்டியாறேன்னு சொல்லி ஒரு ஆளையும் இது வரைக்கும் கூட்டியாரல.” என்று வினோத்திடம் குறை சொன்னார். வினோத் அனுதாபத்துடன் தலை அசைத்தான்.

“உங்க நண்பர்கள் யாராச்சும் இருந்தா சொல்லுங்க வினோத். பெரிய ரூம். இரண்டு பேரு தங்கலாம். தொள்ளாயிரம் குடுத்தாபோதும்.”

வினோத்தும் தலையை ஆட்டிக்கொண்டே “சொல்றேன்” என்று தனது அறைக்குள் சென்றுவிட்டான்.

***

“மை நேம் ஐரிஸ்” என்றாள் சீனப் பெண்.

“சிவகுமரன்“ இருவரும் கை குலுக்கினர். ஐரிஸ் புன்னகைத்தாள். அவள் முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள், அவளுக்கு 50 வயது இருக்கலாம் என்றன.

“நீங்க இந்த ஏரியாலதான் தங்கி இருக்கீங்களா?” என்றாள்.

“இல்ல பக்கத்துல. தியாங் பாரு.”

“யூ ஒர்க் ஹியர்?”

“எஸ். எஸ்.” அடுத்த கேள்வி என்ன என்று அவருக்குத் தெரியும்.

“யூ சிங்கப்பூரியன்?”

“நோ. பி.ஆர்.” சிறிய மௌனத்துக்குப்பின், “நான் எதாச்சும் நன்கொடை கொடுக்கணுமா?”

“அது உங்க இஷ்டம் பிரதர். இது உங்க ஹிந்து டெம்பில் மாதிரிதான். நோ மணி ஃபார் என்ட்ரி. நான் கூப்பிடறது ஆசிகள் வாங்க மட்டும்தான். உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?”

“அதுக்கப்புறம்தானே என் வாழ்க்கையே நாசமாப்போச்சு!” என்று மனதில் நினைத்தபடி “ஆமாம்” என்றார்.

***

ஞாயிற்றுக்கிழமை மதியம். சிவாஜியின் ராஜரிஷி படம் வசந்தத்தில் ஓடிக்கொண்டிருந்தது. சிவகுமரன் கைபேசியில் கேண்டி கிரஷ் விளையாடியபடி, அவ்வப்போது அதையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

“உங்க கிட்ட ஒண்ணு பேசணும்”, மகேஸின் குரல்.

“ம்ம் சொல்லு” கைபேசியிலிருந்து அவர் தலை நிமிரவில்லை. என்னவாக இருக்கும்? “இந்தமாசம் காசு போதல. கொஞ்சம் வினோத்கிட்ட அடுத்தமாச வாடகைய முன்னமே கேக்கறீங்களா?” என்றுதான் இருக்கும்.

“கேக்கறீங்களா?” மகேஸ் பக்கத்து சோபாவில் அமர்ந்து, தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவளைப் பார்க்காமலே இவருக்குத் தெரியும்.

“ம்ம்… நீ சொன்னாதானே”

“என் தம்பி அடுத்தமாசம் வரானாம். இங்க வேல தேட.”

“என்னவாம் அவனுக்கு?”

“அதான் சொன்னேனே. இங்க வேல தேட.”

“ஏன் கொலோம்போல வேல இல்லையாமா?”

“அவனுக்கு அங்க இருக்கப் பிடிக்கலையாம்.”

“ஆமா. இங்க சிங்கப்பூருல வாங்க வாங்க வேல தரோம்னு கூப்பிடறாங்க பாரு. ஏ-லெவல் கூட அவன் முடிக்கலதானே?”

“இப்போ பார்ட் டயமா ஒரு டிப்ளமோ முடிச்சிருக்கான்.”

கைபேசியை சோபாவில் வைத்துவிட்டு, விசுவாமித்திரர் திரிசங்குவை சொர்க்கத்துக்கு அனுப்பும் காட்சியை பார்க்கத்துவங்கினார். டி.வி அருகே ஒரு பெரிய புகைப்படம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. சிவகுமரனும் மகேஸ்வரியும் திருமணக்கோலத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்தனர். புன்னகையுடன்.

“என்ன பேசாம இருக்கீங்க?”

“அதான் நீயும் உங்க அம்மாவும் முடிவு பண்ணிட்டீங்களே? அப்புறம் என்னை எதுக்கு கேக்கற?”

“என்ன இப்படி சொல்லுறீங்க? நீங்கதான் அவனுக்கு வேலை வாங்கித் தரணும்.”

“ஓ. இப்போ அது வேற நான் செய்யணுமா?”

மகேஸ்வரிக்கு எல்லாம் சுலபம் என்ற எண்ணம். சிங்கப்பூரில் வேலை கிடைப்பது அவ்வளவு எளிதா? அந்த முஸ்தபா வேலையை விட்டிருக்கக்கூடாது என்று மீண்டும் தோன்றியது.

***

முஸ்தபா வேலையும் அவ்வளவு எளிதல்ல. செக்யூரிட்டி, பொருட்கள் திருட்டு போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். முஸ்தபாவை எல்லோரும் ஷாப்பிங் இடமாக ம் மட்டும் நினைக்கிறார்கள். அங்கு ஒருநாளைக்கு எவ்வளவு சாமான் காணாமல்போகும் என்று வெளியில் யாருக்கும் தெரியாது. என்னதான் பொருட்களில் ஒட்டியிருக்கும் டேக் கண்டறியும் இயந்திரங்கள் வைத்திருந்தாலும், டேக்கை உருவிவிட்டு பொருட்களை எடுத்துச் சென்றுவிடுவார்கள். இந்த வேலைசெய்ய ஒரு கும்பலே இருந்தது.

அவரின் வேலை சி.சி.டி.வி காமிரா வழியே, கடைக்கு வரும் மக்களைக் கவனித்து, அதில் எது திருட்டு கும்பல் என்று கண்டுபிடிப்பது. “ஒரு மாடில நம்ம கேமரா வழியா அவனுவள ஃபாலோ பண்ணிக்கிட்டே இருப்போம். அவனுவ இன்னொரு மாடியில அடிச்சிட்டு போயிடுவானுவ!”

அதுவும் பலர் அற்பமான பொருட்களைத் திருடுவார்கள். மேக்கப் கிட். சென்ட்டு பாட்டில். ஒரேயொருமுறை ஒருத்தன் எல்.சி.டீ டி.வியைத் திருட முயன்று மாட்டிக்கொண்டான். அதற்கு அவர்தான் சாட்சி. கோர்ட்டில் சாட்சி சொல்லும்போது, சிவகுமரனையே முறைத்துக் கொண்டிருந்தான். அடுத்தநாள் விடியற்காலை தனது நைட் ஷிப்டை முடித்துவிட்டு பிராட்டா சாப்பிடப் பக்கத்து தெருவுக்குச் செல்கையில், யாரோ பின்தொடர்வது போல் உணர்ந்தார்.

முஸ்தபா கூட்டமாக இருந்தாலும், இரண்டு சந்துகள் தள்ளிச் சென்றால், ஆள் இல்லா குட்டித் தெருக்கள். வேகமாக அந்தவொரு தெருவுக்குள் நுழைந்தார். அவரையே அந்த உருவம் தொடர்ந்தது. கண்டிப்பாக அந்தத் திருடனின் நண்பனாக இருக்கும் என்று நினைத்து அலறிக்கொண்டே ஓடத்துவங்கினார். அந்த உருவமும் துரத்தியது. ஆனால் பிராட்டா கடை அருகே வந்து திரும்பிப் பார்த்தால், யாரும் இல்லை.

அடுத்த நாளே வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

***

“நீங்க டின்னர் சாப்பிட்டீங்களா?” ஐரிஸ்ஸின் குரல் அவரைத் திரும்ப இழுத்தது. வெள்ளைக்கோவிலின் படிகளில் ஏறிக்கொண்டிருந்தார்.

“ம்ம் இல்ல”

“சரி முதல்ல கைய தொடச்சுக்கங்க.”

கோவில் வாசலில் இரண்டு ஆட்கள் அவரைத் சிரம்தாழ்ந்து வணங்கி, ஈரமான குட்டி துண்டு ஒன்றை அவரிடம் தந்தனர். அவர் அதைப் பெற்றுக்கொண்டு, ஐரிஸ் என்ன செய்கிறாள் என்று பார்த்தார். அவளைப் போலவே தனது கைகளை துடைத்துக் கொண்டார். பின்னர் துண்டை மீண்டும் அந்த ஆட்களிடம் கொடுக்க, அவர்கள் குனிந்து வணங்கி அதை பெற்றுக்கொண்டனர். இவரும் தயக்கத்துடன் குனிந்து வணங்கி உள்ளே சென்றார்.

உள்ளே பெரிய ஹால். நடுவில் குவான்-யின்னின் சிலை. அதேசிலை அவர் பூஜை அறையிலும் இருந்தது. சிலையின் முன், வரிசை வரிசையாக நாற்காலிகளில் பலபேர் உட்கார்ந்து தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர்.

“நீங்க நூடில்ஸ் சாப்பிடறீங்களா இல்ல ரைஸ் ஆ?”

புரியாமல் விழித்தார். “முதல்ல சாப்பிடுங்க. அப்புறம் மேல பிரேயருக்குப் போகலாம்” ஹாலின் வலது ஓரத்தில் நீளமான ஒரு மேஜையில் அடுக்கடுக்காக வைத்திருந்த வெள்ளை ’டேக் அவே’ டப்பாக்களைச் சுட்டிக்காட்டினாள்.

“நூடில்ஸ் ஆர் ரைஸ்?‘

சிவகுமரன் யோசித்தார். அவருக்கு வீட்டுக்குச்செல்லும் ஆர்வம் இல்லை. மகேஸை நினைத்தாலே கடுப்பாக இருந்தது.

“நூடில்ஸ்” என்றார்.

ஐரிஸ் மேஜை அருகே சென்று, அங்கிருந்த ஒரு முதியவரிடம் ஏதோ சொன்னாள். அவர் புன்னகையுடன் ஒரு டப்பாவை எடுத்துக் கொடுத்தார். இவர் அதைக் குனிந்து வணங்கிப் பெற்றுக்கொண்டார். நீளமான மேசைகளில் அமர்ந்து, சீன கட்டடத் தொழிலாளிகள் பலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களைத் தாண்டி ஹாலின் பின்புறம், ஓரமாக இருந்த மேசைக்கு அவரைக் கூட்டிச்சென்றாள்.

“நீங்க சிங்கப்பூர்ல எவ்வளவு வருஷமா இருக்கீங்க?”

“இருவது வருஷத்துக்கு மேல” என்றார், ஒருவாய் நூடில்ஸ் சாப்பிட்டுக்கொண்டே. பீ ஹூன். ருசியாக இருந்தது. ஏனோ இதமாகவும்.

“யூ காட் கிட்ஸ்?”

***

இன்னொரு ஞாயிற்றுக்கிழமை மதியம். கதவு தட்டப்பட்டது. திறந்தவுடன், மகேஸின் அக்காவும், அவளின் கணவரும், கைக்குழந்தையும் புன்னகையோடு நின்றிருந்தனர்.

“வாங்க! வாங்க!” என்று அவர்களை வரவேற்றாலும், சிவகுமரனின் மனதில் ஒரு சிறிய அச்சம்.

மகேஸின் அக்கா புருசனைக் கண்டாலே இவருக்குப் பிடிக்காது. அவன் மீடியாகார்ப்பில் உதவி மேற்பார்வையாளன். “இது நொள்ள அது நொட்ட” என்று சொல்லிக்கொண்டே இருப்பான். போனமுறை வந்தபோது பாத்ரூம் சின்க் மேலே கண்ணாடி வேண்டும் என்று கேட்டான். ஷேவிங் செய்துகொள்ள.

“வினோத் இவ்வளோ நாளா தங்கறாரே, ஒரு வாட்டியாச்சும் அவர் கண்ணாடி கேட்டாரா? உன் அக்கா புருசன் மட்டும் ஏன் இப்படி?”

இந்தமுறை என்ன சொல்லுவான் என்று யோசித்தார்.சட்டையைச் சொரிந்தபடி “ஹால்ல இன்னும் ஏ.ஸீ போடலியா?” என்றான் உதவி மேற்பார்வையாளன். இவர் அதைக் கவனிக்காதவாறு, “வளர்குழலி!” என்று கொஞ்சலுடன் குழந்தையைப் பார்த்தார்.

மகேஸுக்கும் சிவகுமரனுக்கும் வளர்குழலியை கொஞ்சுவது பிடிக்கும். ஹாலின் நடுவில் அவளை ஒரு பாயில் படுக்கப் போட்டு, அவர்களும் மகேஸின் அக்காவும் அவளை கொஞ்சிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. டி.வியில் ஏதாவது பாட்டு வரும். இல்லை கைபேசியில் ‘அடடா மழைடா’ பாட்டைப் போட்டு தானும் பாடுவார். வளர்குழலி கைகளைத் தட்டியோ, கால்களை உதைத்தோ ஈடுகொடுப்பாள். உதவி மேற்பார்வையாளன் உண்ட களைப்பில் சோபாவில் தூங்கிக் கிடப்பான்.

***

“உங்க முழு பெயர இதுல எழுதுங்க. ஸ்பெல்லிங் கரெக்டா இருக்கணும்.”

நூடில்ஸ் சாப்பிட்டு முடித்தவர், ஐரிஸ் அவரிடம் நீட்டிய சிறிய புத்தகத்தையும் பேனாவையும் பெற்றுக்கொண்டார். அதில் தனது பெயரை எழுத, எதிரே இரு பெண்மணிகள் அவர் எழுதுவதைக் கவனித்தார்கள்.

“இப்போ நீங்க எதாச்சும் சின்ன நன்கொடை குடுத்தீங்கன்னா உங்கள ரெஜிஸ்டர் பண்ணிடுவாங்க. இது ஒருவாட்டிதான். இனிமே நீங்க எப்போ வேணும்னாலும் இங்க வந்து ஆசி வாங்கிக்கலாம். உங்க பேர சொன்னாபோதும்!”

சிவகுமரன் வாலட்டிலிருந்து பத்துவெள்ளித் தாள் ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

ஐரிஸ் பணத்தையும், சிறிய புத்தகத்தையும் எதிரே இருந்த பெண்மணிகளிடம் கொடுத்தாள். அவர்களில் கண்ணாடி அணிந்த ஒருவர், வேறொரு நோட்டில் ஏதோ குறித்துக்கொண்டார்.

“சரியான ஸ்பெல்லிங்தானே எழுதியிருக்கீங்க? இல்லாட்டி… அத தமிழ்ல எப்படி சொல்லுவீங்க… புண்… யம்… ”

“புண்ணியம்?”

“ஆமா அதுதான். ஸ்பெல்லிங் தப்பா இருந்தா, அது வேற ஆளுக்குப் போயிடும்“ என்றபடி ஐரிஸ் சிரித்தாள்.

***

“அது ரொம்ப சக்திவாய்ந்த கோவிலாம். அங்கபோனா நாம நினைக்கறது நடக்கும். எதுவுமே சரியா நடக்க மாட்டேங்குதுதானே நமக்கு?”

“உன் அக்கா சொன்னாளா?” கேள்விகேட்டுப் புண்ணியமில்லை. மகேஸ் முடிவெடுத்துவிட்டாள் என்று தெரிந்தது. தமிழ்நாடு போனார்கள். செலவு ஆனது. வந்தார்கள்.

அடுத்து சாமியார் ஒருத்தர் வீட்டுக்கு வந்தார். ஒருநாள் முழுவதும் வீட்டில் பூஜை செய்தார். கிளம்பும் முன் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம், கால் கழுவாமல் வீட்டிற்குள் வருவதுதான் என்றார்.

அன்றிலிருந்து வாசலில் ஒரு பக்கெட் தண்ணி. அதில் சிறிதளவு மஞ்சள். வினோத்தும்கூட கால்களைக் கழுவிவிட்டுதான் வீட்டினுள் வரவேண்டும் என்றானது.

***

“ஹெவென்லி தாவோ என்றால் என்ன?”

வெள்ளைச்சட்டை கருப்பு பேன்ட் அணிந்த ஒருவர், கரும்பலகை ஒன்றில் “ஹெவென்லி தாவோ” என்று எழுதிக்கோடிட்டார். தனது பெயரை சொர்க்கத்துக்குச் செல்ல ரெஜிஸ்டர் செய்தபின் இவரும் ஐரிஸ்ஸும், இந்த வெள்ளைச்சட்டை ஜென்டில்மேன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

“தாவோ என்றால் பாதை. ஹெவென்லி தாவோ என்றால் சொர்க்கத்துக்குச் செல்லும் பாதை. நம்ம வாழ்க்கையில எத நம்மால தீர்மானிக்க முடியும்? நம்ம பிறப்ப தீர்மானிக்க முடியுமா? நாம எந்தக் குடும்பத்துல பிறக்கறோம்? அதத் தீர்மானிக்க முடியுமா? தீர்மானிக்க முடிஞ்சா, அப்புறம் எல்லாரும் பணக்கார குடும்பத்துலதானே பிறப்பாங்க? ஏழைங்களுக்கு குழந்தையே இருக்காது. நம்மால நம்ம முகத்த தீர்மானிக்க முடியுமா? அப்போ உலகத்துல எல்லாரும் அழகா இருப்பாங்க.”

சிவகுமரன் சிரித்தார். “உலகத்தில் எல்லோரும் அழகாய் இருந்தால்!” என்ற எண்ணம் அவரை உற்சாகப்படுத்தியது.

***

சிறுவயதில் இவருக்குத் தன்னை அழகுபடுத்திக்கொள்ள மிகவும் பிடிக்கும். குளித்து முடித்து, சட்டை பவுடர் எல்லாம் போட்டுக்கொண்டு, சமையலறையில் அம்மாவுக்கு உதவச் செல்வார்.

கே.எல்லில் மாமாவின் வீட்டில் தங்கியிருந்தார்கள். சிவகுமரன் தனது அப்பாவைப் பார்த்ததே இல்லை. மாமாதான் எல்லாம். மாமாவுக்கு ஓடியாடி வேலை செய்வார். அவர் வீடு கடல்போல இருக்கும். விடுமுறைக்கு எல்லோரும் வெளியே சென்றால், இவர்தான் வீட்டைக் கவனித்து கொள்வார். அந்த நாட்களில் எல்லாம் வீட்டு ராஜா போலிருப்பார் – டி.வி பார்த்துக்கொண்டு, பக்கத்து ரொட்டிக்கடையிலிருந்து நினைத்ததை வாங்கிவந்து சாப்பிட்டு.

சிங்கப்பூருக்கு மாமா அவரை அழைத்து வந்தவுடன் தொல்லை துவங்கியது. மாமாவின் ஃபாக்டரியில் செக்யூரிட்டியாக வேலை செய்தார். சம்பளம் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று சொல்லி கடைசியில் 4 வருடம் வேலை பார்த்தபின் அவரின் கல்யாணத்தின் போதுதான், ஒரு தொகையைக் கொடுத்தார். அதுவும் என்ன தொகை? “நீ சாப்பிட்ட செலவு மத்த செலவு எல்லாம் கழிச்சுட்டேன்” என்றார்.

பெண்ணாவது தனக்குப் பிடித்தபெண்ணா? இல்லை. மாமா பார்த்த பெண். “பொண்ணு சிங்கப்பூரியன்டா. ஒரு கொறைச்சலும் இல்ல. அப்பா அம்மா ஸ்ரீலங்கா போயிட்டாங்க. நீயும் பி.ஆர் வாங்கிடு. கையோட கல்யாணம் முடிச்சிடுவோம்.”

கல்யாணம் முடிந்தவுடன் புக்கித் மேராவில் வீடு. அதுவும் மாமா ஏற்பாடு. அதன்பின் அவர் முகத்திலேயே முழிக்க கூடாது என்று முடிவு செய்தார் சிவகுமரன். வேறு செக்யூரிட்டி வேலை தேடினார். பேருந்து ஓட்டுனர் தேர்வுக்குச் சென்றார். தேர்வு பெறவில்லை. முஸ்தபாவில் சேர்ந்தார். வீட்டில் இருக்கும் இரு அறைகளையும் வாடகைக்கு விட்டார்.

முதலில் குடிவந்த சுசேந்திரனால் பெரும் பிரச்சனை. அவர் அவனைத் தம்பியாகப் பார்த்தார். ஆனால் மகேஸுக்கு பிடிக்கவில்லை. ஒருநாள் வேறு ஏதோ விஷயம் பற்றி சண்டை போடுகையில், அலறினாள், “சுசேன் சுசேன்னு நீ ஏன் வழியற? அவன மடியில உக்காத்தி வெச்சு சோறு ஊட்டற… நீ என்ன கே வா?!”

***

“இங்க வெயிட் பண்ணுங்க. மாஸ்டர் உங்கள உள்ள கூப்பிடுவாரு.”

நான்கு மாடிகள் ஏறி, வெள்ளைக்கோவிலின் மேல்தளத்தில், ஒரு கதவருகில் காத்திருந்தார். அவருடன் ஐந்தாறு நபர்கள். ஆளுக்கொரு பேட்ஜ் தரப்பட்டிருந்தது. அவரின் பேட்ஜில் மட்டும் “வி.ஐ.பி” என்று எழுதி இருந்ததைப் பார்த்தார்.

உள்ளே வரச்சொன்னார்கள். உள்ளே பெரிய மண்டபம். பத்து வரிசைகளில் சிறிய சதுர மெத்தைகள் வைத்திருந்தனர். அந்த மெத்தைகளின் முன்னே ஐந்து பெரிய சிலைகள். சுவர்களில் மொட்டையடித்த பல நபர்களின் ஓவியங்கள். மண்டபத்தின் ஓரங்களில் வழிகாட்டிகள் போல் சிலர் நின்றிருந்து வழிமுறை சொன்னார்கள்.

ஒரு ஆள் அந்தச் சிறியமெத்தையில் அமரப் போனார். அப்போது வழிகாட்டி, “அமரக் கூடாது. எல்லோரும் நேர் வரிசையில் ஒவ்வொரு மெத்தையின் பின்னே நில்லுங்கள். ஒவ்வொரு பெயராக படிப்போம். உங்கள் பெயர் கேட்டால், கை தூக்குங்கள்.”

சிவகுமரன் உற்றுக் கவனித்தார். பல பெயர்களின் இடையே அவரின் பெயர் வந்ததும் உடனே கை தூக்கினார். பெயர்களைப் படிப்பவர் அவரைப் பார்த்து புன்னகை புரிந்தார்.

பிறகு, ஒவ்வொருவரையும் தனக்கு முன்னே இருக்கும் மெத்தையில் மண்டியிடச் சொன்னார்கள். வெள்ளை உடை அணிந்த மாஸ்டர், நடுவில் இருக்கும் சிலைமுன் வந்து நின்றார். ஐந்து சிலைகளில், நடுவில் இருக்கும் பெரிய சிலை சிரிக்கும் புத்தர் சிலை. சிரிக்கும் புத்தர் என்றாலே அவருக்கு குணா ஞாபகம்தான் வரும்.

***

“உன் ரெஸுமே வெச்சிருக்கியா? மூணு காப்பி என்கிட்ட கொடு.”

“சரி மாமா! நான் பில்கேட்ஸ் ஆனதும் உங்கள கண்டிப்பா கவனிச்சுக்கறேன்.” மகேஸின் தம்பி குணா சகல பற்களும் காட்டியபடி இளித்தான். அவன் கருப்பு முகத்தின் பின்னணியில் பற்கள் பளிச்சிட்டன.

“கேட்டியா மகேஸ் உன் தம்பி சொல்லுறத? பில் கேட்ஸாகப் போறாராம்!” பாட்டு கேட்டுக்கொண்டே பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்த மகேஸ் புன்னகைத்தாள்.

“என்ன வயசுடா ஆவுது உனக்கு?”

“25 மாமா. மாமா, நீங்க வேல பாக்குற கே.எப்.ஸிலயே எனக்கும் ஒரு வேல பாருங்களேன்?”

“கே.எப்.ஸியா? அந்த வேலைய எப்போவோ விட்டுட்டேன்டா” குரல் சற்று தொய்வுற்றது.

“கைல இருக்கற முடிய ஷேவ் பண்ணு, கால்ல இருக்கற முடிய ஷேவ் பண்ணு, தொப்பி போட்டுக்கோ, இதப்பண்ணு அதப்பண்ணுன்னு… மாவு பெனையரதுக்கு இவ்வளவு பேச்சா! ச்சே! அதான் விடுங்கடா ஆளன்னு வந்துட்டேன்.”

“இப்போ என்ன பண்ணுறீங்க?”

“இங்க பக்கத்துல ஜிம் இருக்கு. அங்க க்ளீனிங் சூப்பர்வைஸர்.” உண்மையில் கிளீனர். ஆனால் இப்படித்தான் யார் கேட்டாலும் பதில் சொல்வார்.

“இங்க ரூம்ல ஒருத்தர் இருக்காரே… அவரு என்ன வேல பண்ணுறாரு?”

“அவரு ஐ.டி டா. தெரியுமா உனக்கு?”

“மாமா! நான் ஐ.டி எல்லாம் நல்லா பண்ணுவேன். சிஸ்டம் இன்ஸ்டால் பண்ணுறது. வேர்ட், எக்ஸல் எல்லாம் தெரியும்.”

“சரி நாளைக்கு அவர்கிட்ட பேசி பாக்கறேன். ஆமா உனக்கு கம்ப்யூட்டர் நல்லா தெரியுமா?”

“ம்ம்!”

“நம்ம வீட்டு கம்ப்யூட்டர் கொஞ்சம் பாக்கறியா? எப்போ ஆன் செஞ்சாலும் ஏதோ இன்ஸ்டால் இன்ஸ்டால்னு கேக்குதுடா. அமுத்தினா போகவும் மாட்டேங்குது. உங்க அக்காவும் நோட்ஸ் எல்லாம் அதுலதான் வெச்சிருக்கா.”

“அப்படி இருக்க கூடாதே. இதோ பாக்கறேன்.”

***

“அம்மா சொன்னது சரிதான். சர்ர்ரியான வேஸ்ட்டு மாமா நீ! உன்ன நம்பி வந்தேன் பாரு…”

சிங்கப்பூரில் ஒருமாதம் தங்கி, வேலை தேடுகிறேன் என்று சொல்லி சாப்பிட்டு, அவரின் வீட்டு ஹாலிலே தூங்கி, அவரைப் பார்த்து சொன்ன வாக்கியம் இது. அதைக்கேட்ட சிவகுமரன் மெளனமாக அறைக்குள் சென்றுவிட்டார். இரண்டே நாட்களில் குணாவும் இலங்கைக்கு திரும்பிவிட்டான்.

ஒருவாரத்துக்கு மகேஸும் சிவகுமரனும் பேசிக்கொள்ளவில்லை. ஒருநாள் இருவரும் ஹாலில் அவரவர் கைபேசித் திரையை உருட்டிக்கொண்டிருக்க, பின்னணியில் டி.வி ஒலிக்க, வினோத் ரூமிலிருந்து வெளியே வந்தான். “துணி வாஷிங்க்கு போடணும்…”

“ம்ம் இதோ…” என்று மகேஸ் தலை அசைத்தாள். துணி துவைக்கும் இயந்திரத்தில் ஏற்கனவே இருந்த துணிகளை நீக்கக்கோரி வினோத் தொடுத்த விண்ணப்பம். சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்று விட்டான்.

“உங்க துணிதான். போய் எடுங்க.”

சிவகுமரன் கைபேசியிலிருந்து நிமிர்ந்து மகேஸை முறைத்தார்.

“நான் என்ன வேஸ்ட்டா மகேஸு?”

“விடுங்க. அவன் ஏதோ கோவத்துல உளறிட்டான்…”

சிவகுமரனின் தலை சரிந்தது. மகேஸ் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். அவர் தோளில் கைவைத்தாள்.

“நம்ம படுற கஷ்டம் அவனுக்குத் தெரியாதுங்க. சின்ன பையன். விடுங்க.”

“நான் ட்ரை பண்ணிட்டுதானே இருக்கேன்?”

“ச்ச்” பெருமூச்சுடன் மகேஸ் எழுந்தாள். “நீங்க முதல்ல உள்ள வாங்க. உள்ள பேசிக்கலாம்.”

ஹால் சோபாவிலிருந்து எழ அவரின் கையைப் பிடித்து இழுத்தாள். அவள் கையை உதறிவிட்டு அறைக்குள் சென்றார்.

***

“அந்த விளக்கையே உற்றுப்பாருங்கள். இப்போது உங்களுக்குச் சொர்க்கத்துக்கு செல்லும் வாசலைத் திறந்து விடுகிறேன்.”

விளக்கையே பார்த்துக்கொண்டிருந்த சிவகுமரனின் இடது கண்ணில் ஒரு நீர்த்துளி.

சிவகுமரனருகே வந்தார் மாஸ்டர். அவரின் புருவங்கள் இடையே ஆள்காட்டி விரலை வைத்தார்.  அவர் கண்முன்னே கைவைத்து கதவை திறப்பதுபோல் சைகை செய்தார். வலதுபுறம் நின்றிருந்த சிறுவன் ஒரு வார்த்தை சொன்னான். இப்போது பதினாறுமுறை வணங்கவேண்டும். ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டு பதினாறுமுறை குனிந்து நிமிர்ந்தார். கண்ணீர்த்துளி எங்கோ பறந்தது.

மாஸ்டர் புரியாத எழுத்துகளில் எழுதியிருந்த காகிதத்தை மடக்கி தங்கக் கிண்ணத்தில் எரித்தார். அந்தக் காகிதத்தை நெருப்பு மெல்லப் பருகுவதை சிவகுமரன் கூப்பிய கைகளுடன் பார்த்தார். நெருப்பிலிருந்து ஒரு துகள் காற்றில் மிதந்து, மறைந்தது.

“நான் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்த மூன்று ரகசியங்களையும் நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளவேண்டும். சென்று வாருங்கள்!” என்றார் மாஸ்டர்.

மூன்றுமுறை வணங்கிவிட்டு அனைவரும் எழுந்தனர். ஒவ்வொருத்தராக அவர்களின் பேட்ஜை திருப்பிக் கொடுத்தனர். பிறகு, அனைவரின் சட்டையிலும் வட்டமான சிகப்பு ஸ்டிக்கர் ஒன்று ஒட்டினார்கள். வெளியே வந்ததும் அவரை ஐரிஸ் சந்தித்தார்.

“கீழ வாங்க. உங்களோட மந்திரப் புத்தகம் உங்களுக்கு வாங்கித் தரேன்.”

ஒரு சிறிய புத்தகத்தை அவரிடம் கொடுத்தாள். “நீங்க கொடுத்தீங்களே பத்து வெள்ளி. அது இந்தமாதிரி மந்திரப்புத்தகங்கள் அச்சிடத்தான். ஏழைமக்கள் படிக்க. உங்கபேரு இருக்கு பாருங்க” கடைசி பக்கத்தில் சிவகுமரன் என அச்சிடப் பட்டிருந்தது.

 “சரி, அடுத்த வாரமும் வாங்க. உங்க மனைவிய கூட்டிக்கிட்டு.”

அவருக்கு ஐரிஸிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்போல தோன்றியது.

“வரும்போது என் பஸ் ஸ்டாப்பை மிஸ் பண்ணிட்டேன். ஒரு ஸ்டாப் தள்ளி எறங்க வேண்டியதா போச்சு. அப்புறம்தான் உங்கள சந்திச்சேன்.”

தன் பெயர் அச்சிடப்பட்டிருந்த கடைசித்தாளை மட்டும் கிழித்து எடுத்துக்கொண்டு, மந்திரப்புத்தகத்தை ஐரிஸ் கையில் கொடுத்தார் சிவகுமரன். படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாக இறங்கி, பேருந்துகள் விரைந்து கொண்டிருக்கும் சாலையை நோக்கி நடந்தார். கோவில் வாசலிலிருந்த விளக்குக்கம்பத்தில், “ஐம்பதாவது பிறந்தநாள் வாழ்த்துகள் சிங்கப்பூர்!” என்ற பேனர் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அதைக்கடந்து தன் பார்வையிலிருந்து மறைந்த பிறகும், அவர் சென்ற திசையை ஐரிஸ் ஆச்சர்யத்துடன் பார்த்தபடி நின்றாள்.


இக்கதை அக்டோபர் 2016இல் வல்லினம் இணைய இதழில் வெளியானது.

Leave a Reply

%d bloggers like this: